Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Saturday, May 9, 2015

...

யாரோ அவனின்  

நிழற்கரம் பற்றி 

கடந்த சாலையின் முடிவில் 

பகிரவழியில்லா நன்றியொன்று

பிரசவிக்கிறது 

Monday, September 24, 2012

..??..

மாதத்தின் 
இறுதி இரவு.

தொடங்கியிருந்தோம் 

நாளை
வீட்டு வாடகை 
கரண்ட் பில்
வாட்டர் பில்
மளிகை பொருள்
அம்மாக்கு பணம் அனுப்பனும் 

இன்னும் 
இன்னும்
இன்னுமென 

மூச்சுவாங்கியது 
இருவரோடுங்கூட 
பிளாஸ்டிக்  உறைக்குள்
நீந்தும் வால் அணுக்களுக்கும்


Wednesday, October 19, 2011

..!!..

வரவேற்பறையின் இருக்கைகளில்
பிடித்த ஒவ்வொருவரையாய்
அமர்த்திப் பார்க்கிறது
என் தனிமை.

Monday, October 10, 2011

..!!..

தினம் தினம்
ஒரு செய்தியை
வாசலில் வைத்துப்போகிறது
காலம்

எனக்கான
இன்றைய செய்தி

ஒற்றை இறகு!!

Saturday, September 17, 2011

..??..

யாரோ செய்த பாவம்
கை கால் முளைத்து
ஆடையின்றி,
கண்ணாடி வழி
பார்த்திருந்தது..

ஆடையணிந்திருந்த
மெழுகு பொம்மையினை!!

Tuesday, July 20, 2010

..!!..

மௌனத்தில் உதிர்த்த
கண்ணீர்த்துளிகள்..
எழுப்பும் உளிச்சத்தம்
என்னுள்..!

செதுக்கப்படுகின்றேன்
நான்..
சீக்கிரம் சிற்பமாகிடுவேன்..!!

Tuesday, May 25, 2010

..!!..

ஊறி நனைந்தது மார்.
எங்கிருந்தோ வரும்
குழந்தையின் அழுகுரல்..!!

Friday, May 7, 2010

மழை நாளில்...

வெளியே மழை.
உள்ளே நான்.
இருவருக்குமிடையே
சிக்கித் தவிப்பதாய் உணர்த்தின..,
மூடாக்கதவருகே ஒ(ப)துங்கிய
ஈர ஜோடிச் சிட்டுக்குருவிகள்.

நெல்மணிகள் எடுக்கத்தான்
எத்தனித்தேன் - அவைகளோ
பறக்க எத்தனிக்கின்றன.
அமைதியாகின்றேன்.

விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.

நிர்ச்சலனமாய்
நாங்கள்..
சலசலக்கிறது
மழை..

மூவருமாய் மழை
பார்த்தோம்.
இடையிடையே..,
நான் அவற்றையும்..
அவை என்னையும்..

இன்னுமாய்..,
ஒன்றையொன்று
அவை பார்த்துக்கொண்டது,
மழையை விட அழகாயிருந்தது எனக்கு..!!

Monday, November 2, 2009

..!!..

தானாய் எதுவும்
தோன்றவில்லை..

யோசித்தும் கூட
முடியவில்லை..

எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!

Saturday, August 29, 2009

அந்த நூல் அவனை வாசிக்குமா??

சத்தம் போடாதே மனமே..,
அவளைக் கண்டதும்.
இது நூலகம்!!

பல நேரங்களில்
நான் நூலகத்திற்கு செல்வது..,
அவளை வாசிப்பதற்காக மட்டுமே!!

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"

வரிகளின் கரைகளில்
உருளும்.. அவள் விழிகளின்
கரம்பிடித்து உலவும்
என் மனமும்!!

ஆழ்ந்த கவனத்துடன்
நகர்ந்துகொண்டே இருக்கிறாள்..
நகர்த்தும் பக்கங்களுக்குள்.
நானோ..அவளினுள்!!

"அசையா ஓவியம்"
"இமைக்கும் சிற்பம்"
"தேவதை நீ
நூலகம் கோயில்"
"என்னிதய நூலகத்தில்
கவிதைத் தொகுப்பாய் நீ!"-என
அலங்கரிக்கிறேன் அவளை
என் கவிதைகளாலும்..
கனவுகளாலும்..
ஆனால்,அவளோ..
கலைந்த கூந்தல் சரிசெய்யும்
விரல்களின் அசைவில்..-என்
கனவுகள் கலைக்கிறாள்!!

அவள் புரட்டிய புத்தகங்களிலேயே
புதைந்து போகிறேன் நான்..
அவள் கைரேகைகள் தேடித்தேடி!!

தொடர்ந்தே இருந்தாலும்
தொலைவாகவே இருக்கிறேன்.
என்றாவது ஒருநாள்..
நேரம் ஒதுக்குவாளா அவள்..?
என் விழிகள் வாசிக்க!!

ஆம்!!

அந்த நூல்
அவனை வாசிக்குமா???

Monday, August 10, 2009

அம்மா போயிட்டு வாறேன்மா...

கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!

நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!

பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!

பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!

நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!


Monday, August 3, 2009

யாசகம்...

அதிகமாகவே வளர்ந்துவிட்ட
தலைமுடியுடன்.. நகங்களும்..

முதலாமத்தில்
எண்ணையின் "இல்லாமை"
இரண்டாமதில்
அழுக்கின் "நிறைவு"

இந்த சோகமான
முரண்பாடுகளுக்கிடையில்
ஆணா?
பெண்ணா?-என்ற
வினாக்களுக்கு இடமேயில்லை..,
அந்த நடை பயின்ற
மனிதப் பிறவி
புழுதியை மட்டுமே
ஆடையாகக் கொண்டதால்!!

வலதுகையால்..
தலையைச் சொறிந்து கொண்டே
நீட்டிய இடதுகையின்
உள்ளங்கையில்..
நான் வைத்த
பழைய ஒருரூபாய் நாணயம்
புதிய ஒளியைக் கொடுத்தது
அந்த இளம்பிறையின் முகத்தில்!!

"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந்த ஒற்றை நாணயம்.."என்ற
என் எண்ணக் குடைச்சலுடன்
இந்த நிகழ்வு
முற்று பெற்று கொண்டிருக்க....

கடந்து சென்று கொண்டே
என்னை நோக்கிய அந்தக்
குழந்தையின்..
விழுந்த பற்களுக்கு இடையே
எழுந்த புன்னகை
மீதமாய் என்னில்...

கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!!

Monday, July 13, 2009

என்ன செய்ய?

உன் வருகையைத் தின்றே
பசியாறிகொள்வேன் நான்!

புரியாமல்..,

உணவுடன் வரும் உன்னை
என்ன செய்வது??

Friday, June 12, 2009

மழை நாளில்....பேருந்துப் பயணம்..!!

நகரும் குடையாகிப் போனது
பேருந்து!

என்னவனின் மடியாகிப் போனது
இருக்கை!

அவன் ஆழ விழிகளாகிப் போனது
ஈரச் சதுர உலகம் காண்பிக்கும்
ஜன்னல்!

அவன் விரல்களின்
பதட்டமான தொடுகைகளாகிப் போனது
தெறிக்கும் சாரல்!

எனைத் தொடும் தூரத்தில்
அவன் சுவாசம் என்றாகிப் போனது
தென்றல்!

எங்களின் புரிந்து கொள்ளப்படாத
மௌனங்களாகிப் போனது
பின்னாகக் கடக்கும் காட்சிகள்!

தானாகவே வந்தமைந்த
அதிர்ஷ்டமாகிப் போனது
பிடித்தபாடல்!

பேருந்தினுள்...,
பறக்கும் நந்தவனமாகிப் போனது
மழைக்கு ஒதுங்கிய
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பு!

மழைக்கு...,
உயிருள்ள வாழ்த்துமடலாகிப் போனது
சிரிக்கும் குழந்தையின்
கைத்தட்டல்கள்!

அத்தனை சந்தோசத்திற்கும்
முற்று புள்ளியானது
நான் இறங்க வேண்டிய
நிறுத்தத்தின் வருகை!

இருப்பினும்...

வடியாத சந்தோசத்துடன்
இறங்கினேன்...
வடிந்துவிட்ட மழையில்
குளித்த பூமியின்
முகம் பார்க்க...

பார்த்ததோ..?

குளிரில் நடுங்கும்
அனாதைத் தாத்தா...
எரிமலையாகிப் போனது
ஈரமழை!!

Sunday, May 17, 2009

இல்லாமை இனிமையாகிறது!

மழையில்
குடையில்லை..

பௌர்ணமியன்று
வீட்டிற்குள் அனுமதியில்லை..

மெழுகும் அதன் ஒளியும்
மின்சாரமில்லை..

படபடக்கும் பட்டாம்பூச்சி
பூவில் தேனில்லை..

நின்றால் மட்டுமே தெரியும் குழந்தை
பயணத்தில் உட்கார இடமில்லை..

கவிஞனின் பசிக்கு
உணவில்லை..

இமைக்காத பார்வை
நமக்குள் மொழியில்லை..

உன் நினைவுகளோடு நான்
என்னோடு நீயில்லை..

ஆம்!
"இல்லாமை
இனிமையாகிறது "

Thursday, May 14, 2009

பயணம்...

நெரிசல்..

வியர்வை..

முகம் தெரியாதவர்களின்
ஸ்பரிசங்களின் சங்கடம்...

அடைத்த ஜன்னல்...

அதனூடே,
நான் பார்க்க...
உன் பெரிய கரங்களின்
சிறிய அசைப்பு.

அத்தனையும் மறந்தே போனது..

வந்துவிட்ட எனக்கான
நிறுத்தம் உட்பட!!!