குழந்தைகளுக்கும்
பொம்மைகளுக்கும் இடையேயான
உலகத்தை நோக்கி பயணித்தேன்.
மயில்பீலிக் கம்பங்களில்
பூக்களின் வேலியால்
சூழப்பட்டிருந்தது அவ்வுலகம்.
வேலிக்கு வெளியே
நானும் நிலவும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
அவர்களை.
பொம்மையுடன்
தானும் கைதட்டிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை.
குழந்தையை அணைத்தபடி
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு பொம்மை.
முத்தம் கொடுத்து
முத்தம் வாங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை.
தன்னைப் பியித்தெறியும் குழந்தையை
சிரித்தபடி பார்த்திருந்தது
ஒரு பொம்மை.
இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்
கேட்பது யாரோ??-என யோசிக்கும் என்னை
பெரிய குழந்தை என
கைநீட்டியது ஒரு பொம்மை
பெரிய பொம்மை என்றது குழந்தை.
இரண்டுமாகவும்
இல்லை நான்.
திரும்பிய திசையில்
நிலவும்.
கறை துடைக்கும்
வழிகள் பேசியபடியே
இருவருமாய் செல்ல,
கனவின் விழிப்பில்..
உறங்கிய என் குழந்தையுடன்,
பொம்மைகளும் ஓய்வாய்..!!