Friday, June 12, 2009

மழை நாளில்....பேருந்துப் பயணம்..!!

நகரும் குடையாகிப் போனது
பேருந்து!

என்னவனின் மடியாகிப் போனது
இருக்கை!

அவன் ஆழ விழிகளாகிப் போனது
ஈரச் சதுர உலகம் காண்பிக்கும்
ஜன்னல்!

அவன் விரல்களின்
பதட்டமான தொடுகைகளாகிப் போனது
தெறிக்கும் சாரல்!

எனைத் தொடும் தூரத்தில்
அவன் சுவாசம் என்றாகிப் போனது
தென்றல்!

எங்களின் புரிந்து கொள்ளப்படாத
மௌனங்களாகிப் போனது
பின்னாகக் கடக்கும் காட்சிகள்!

தானாகவே வந்தமைந்த
அதிர்ஷ்டமாகிப் போனது
பிடித்தபாடல்!

பேருந்தினுள்...,
பறக்கும் நந்தவனமாகிப் போனது
மழைக்கு ஒதுங்கிய
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பு!

மழைக்கு...,
உயிருள்ள வாழ்த்துமடலாகிப் போனது
சிரிக்கும் குழந்தையின்
கைத்தட்டல்கள்!

அத்தனை சந்தோசத்திற்கும்
முற்று புள்ளியானது
நான் இறங்க வேண்டிய
நிறுத்தத்தின் வருகை!

இருப்பினும்...

வடியாத சந்தோசத்துடன்
இறங்கினேன்...
வடிந்துவிட்ட மழையில்
குளித்த பூமியின்
முகம் பார்க்க...

பார்த்ததோ..?

குளிரில் நடுங்கும்
அனாதைத் தாத்தா...
எரிமலையாகிப் போனது
ஈரமழை!!

7 comments:

ச.முத்துவேல் said...

வாழ்வின் கொடூர யதார்த்தங்கள் நம்மை மேகம்போல் மிதக்கும் வாழ்விலிருந்து பிடிவாதமாக இறக்கி சுடும் தரையில் நிறுத்திச் சிரிக்கிறது.

saranece@gmail.com said...

ஈரச் சதுர உலகம் காண்பிக்கும்
ஜன்னல்!

Superb!!!!!

Suresh K said...
This comment has been removed by the author.
Suresh K said...

இரசிகை-க்கு மிக்க நன்றி :)!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//வடியாத சந்தோசத்துடன்
இறங்கினேன்...
வடிந்துவிட்ட மழையில்
குளித்த பூமியின்
முகம் பார்க்க...//

இது காதல் டச்

நல்லாயிருக்குங்க கவிதை

ரகசிய சிநேகிதி said...

இந்தக் கவிதை எனக்கு மழையாகிப் போனது இப்போது...
அழகான உணர்வுகள்... இதமானாது மனதிற்கு
மழையோடு சேர்கிறது இளமையும் முதுமையும் கடைசி வரிகளில்
அருமையான கவிதை பதிவு ரசிகை... வாழ்த்துகள்...

பிரவின்ஸ்கா said...

//எங்களின் புரிந்து கொள்ளப்படாத
மௌனங்களாகிப் போனது
பின்னாகக் கடக்கும் காட்சிகள்!
//

அருமை
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Post a Comment